உக்ரைன் தாக்குதலில் இந்திய மாணவர் காயம்! மறுபிறவி எடுத்த மாணவரின் தற்போதைய நிலை என்ன?
உக்ரைனில் கீவ் நகரில் சில தினங்களுக்கு முன்பு இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவர் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகியுள்ளார்.
உக்ரைனின் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி செய்திருந்தார்.
கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் நாங்கள் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறோம். என் சாவுக்குப் பிறகு மீட்பு விமானம் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை.
கடவுள் எனக்கு 2-வது பிறவி தந்துள்ளார். மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். என்னை இங்கிருந்து வெளியேற்ற உதவும்படி இந்தியத் தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக சக மாணவர்களுடன் எல்லையை நோக்கிச் சென்றேன். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்களை வந்த வழியாகத் திரும்பிச் செல்லுமாறு வீரர்கள் கூறினர்.
நாங்கள் திரும்பும் வழியில் எங்கள் கார் மீது துப்பாக்கியால் சிலர் சுட்டனர். அதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து எனக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மறு பிறவி கிடைத்தது போல் உள்ளது" என்று கூறியுள்ளார்.