மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
சைவ பிரியர்களுக்கு பிடித்தமான பனீர் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பிரியாணி இருக்கின்றது.
தற்போது பகல் நேரம் மட்டுமின்றி நள்ளிரவிலும் அதிகளவில் பிரியாணி கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் சாப்பிடும் வழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
சிறிது ஸ்ரெஸ்ஸாக இருந்தாலும் உடனே சென்று பிரியாணியை சாப்பிட்டு மனதை பக்குவ நிலைக்கு கொண்டு வந்துவிடுகின்றனர்.
இவ்வாறு பிரியாணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில், பனீர் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
பன்னீர் - 400 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
பிரியாணி தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 2
பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஊற வைத்த பன்னீர்
புதினா - 1 கையளவு
கொத்தமல்லி - 1 கையளவு
தண்ணீர் - 2 கப்
பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)

செய்முறை
முதலில் பனீரை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அகலமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதன் பின் மூடியைத் திறந்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 1/2 மணிநேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு 15 நிமிடம் அப்படியே தம் போட வேண்டும். * 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |