வீட்டில் மாவு தயாரித்து காரமான முறுக்கு தயாரிப்பது எப்படி? ஓட்டல் ஸ்டைலையும் மிஞ்சிய சுவை
நாம் இன்று கடைகளில் செய்யும் உணவுகளுக்கு அடிமையாகி விட்டோம்.
அதே சுவையில் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு சில உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சுவைக்கலாம்.
இன்று நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – ஒரு கப் (400 கிராம்)
- உளுந்தம் பருப்பு – ¼ கப் (100 கிராம்)
- சீரகம் அல்லது எள் – 4 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
உளுந்தம் பருப்பை வெறும் பாத்திரத்தில் போட்டு சூடாகும்வரை வறுக்கவும். வறுத்த உளுந்தம் பருப்பைஆற வைக்கவும். பின் மிசினில் கொடுத்து அரிசியையும், உளுந்தம் பருப்பையும் தனித்தனியே அரைக்கவும்.
பின் அரிசி மாவு மற்றும் உளுந்தம் மாவையும் தனித்தனியே சலித்துக் கொள்ளவும்.
பின் வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தம் மாவு மற்றும் சீரகம் அல்லது எள் ஆகியவற்றை போட்டு ஒரு சேரக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரில் தேவையான அளவு உப்பைப் போட்டு கரைக்கவும். பின் உப்புத் தண்ணீரைச் சிறிது சிறிதாக மாவுக் கலவையில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பின் பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து முறுக்கு உழக்கில் அடைக்கவும். அடுப்பில் வாயகன்ற அடிப்புறத்தில் தட்டையாக உள்ள வாணலியை வைக்கவும். பின் அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்குகளை பிழிந்து விடவும்.
முறுக்குகளில் எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும். சுவையான முறுக்கு தயார். இதனை நீங்கள் வீட்டில் செய்து அசத்தலாம்.
