குப்பையையே டன் கணக்கில் இறக்குமதி செய்யும் ஸ்வீடன் - காரணம் என்ன தெரியுமா?
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட நாடாக ஸ்வீடன் உள்ளது. உலகின் மிகவும் சுத்தமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்வீடன், மற்ற நாடுகளிடமிருந்து குப்பையையே இறக்குமதி செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மிகவும் சுத்தமான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும் ஸ்வீடன் ஏன் குப்பைகளை மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் தெரியுமா?
ஸ்வீடனில் குப்பை வெறும் கழிவாகப் பார்க்கப்படுவதில்லை. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை நவீன ‘கழிவிலிருந்து ஆற்றல்’ (Waste-to-Energy) ஆலைகளில் அதிக வெப்பநிலையில் எரித்து, அதிலிருந்து வெப்பமும் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக, கழிவுகளை எரிப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீர் சூடாக்கப்படுகிறது. பின்னர் நிலத்தடிக் குழாய்கள் மூலம் இந்த வெப்பம் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடுமையான குளிர்காலத்திலும் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவுகிறது. அதேபோல், உருவாகும் வெப்பத்தின் மூலம் நீராவி தயாரிக்கப்பட்டு டர்பைன்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
கழிவுகளை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பல் உள்ளிட்ட சில எஞ்சிய பொருட்களும் பிரித்தெடுக்கப்பட்டு, சாலை கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், குப்பையை அனுப்பும் நாடுகளுக்கு குப்பைக் கிடங்குகளின் சுமை குறைகிறது. அதே நேரத்தில், ஸ்வீடனுக்கு தனது ஆற்றல் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான கழிவுகள் கிடைக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில், கழிவுகளை எடுத்துக்கொள்வதற்காக ஸ்வீடனுக்கு பணமும் வழங்கப்படுகிறது. எனினும், ஸ்வீடனின் வெற்றிக்கு குப்பையை எரிப்பது மட்டுமே காரணமல்ல.

கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, கழிவுகளைப் பிரித்தல் மற்றும் இறுதியாகப் பயன்படுத்த முடியாத கழிவுகளிலிருந்து ஆற்றலை மீட்டெடுத்தல் ஆகியவை அதன் கழிவு மேலாண்மை முறையின் முக்கிய அம்சங்களாகும்.
குப்பையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான தொழில்நுட்பத்துடன் வளமாக மாற்ற முடியும் என்பதற்கு ஸ்வீடன் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |