சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! என்ன நடந்தது?
பிரபல நடிகையான சாந்தினி புகார் அளிப்பதற்கு முன்பாக, நடிகை தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, தன்னுடன் 5 வருடமாக குடும்பம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.
இதன்பேரில், பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு அந்த பெண் யார் என்றே தெரியாது எனவும், பணம் பறிக்கும் நோக்கி இவ்வாறு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகியுள்ள மணிகண்டனை போலீசார் தேடிவரும் நிலையில், நடிகை புகார் அளிப்பதற்கு முன்பாக நடிகை தரப்பு வழக்கறிஞரை மணிகண்டன் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அதாவது, கடந்த மாதம் 23-ந் தேதி ஞாயிற்றுகிழமையான முழு ஊரடங்கு அன்று, மணிகண்டன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து நடிகையின் வழக்கறிஞரை சந்தித்துள்ளார்.
அதன் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது. புகார் அளிக்காமல் சமரசமாக செல்வதற்காக தான் மணிகண்டன் தனது உதவியாளர்களுடன் நடிகையின் வழக்கறிஞரை சந்தித்தார் எனவும் நடிகை தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.
யார் என்றே தெரியாது என கூறிய மணிகண்டன், எதற்காக வழக்கறிஞரை சந்தித்தது ஏன் என பல கேள்விகள் எழுந்துள்ளது.