இளம்பெண் விஸ்மயா தற்கொலையின் எதிரொலி -கணவர் அரசு பணியிலிருந்து அதிரடியாக நீக்கம்
வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் விஸ்மயா விவகாரத்தில் அவரது கணவர் கிரண் குமாரை அரசு பணியிலிருந்து பணிநீக்கம் செய்து கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வந்த இளம்பெண் விஸ்மயாவுக்கும், அரசுப்பணியில் இருக்கும் நபருக்கு இவருக்கும் பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
மாப்பிள்ளைக்கு வரதட்சனையாக 100 பவுன், 1ஏக்கர் நிலம், ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்டவற்றை விஸ்மயா பெற்றோர் வழங்கினர்.
இவ்வளவு வரதட்சணை கொடுத்தும், விஸ்மயா வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தனக்கு வரதட்சனையாக கொடுத்த கார் பிடிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக ரூ.10 லட்சத்தை ரொக்கமாக தர வேண்டும் என சண்டைப்போட்டு மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத விஸ்மயா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கு முன்பு, தனது மொபைல் போனில் தனது கணவர் வரதட்சனையாக கொடுத்த கார் பிடிக்காததால், தன்னை துன்புறுத்தியதையும், கண்மூடித்தனமாக தாக்கியதையும், அதனால், ஏற்பட்ட காயங்களையும் புகைப்படமாக பதிவு செய்த தனது உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்திருந்தார்.
வரதட்சணை கொடுமையால் விஸ்மயா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதைத்தொடர்ந்து, விஸ்மயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், தற்கொலைக்கு காரணமான விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்டார். கிரண் குமார் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதையடுத்து, கிரண் குமாரை அரசு பணியிலிருந்து பணிநீக்கம் செய்து கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கை விஸ்மயா போன்ற மரணங்கள் மாநிலத்தில் இனி நடக்காமல் இருப்பதற்கான முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.