ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இல்லை.. நாட்டையை திரும்பி பார்க்க வைத்த கிராமம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை பிறப்பித்து வருகின்றனர்.
ஆனாலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றனர். மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாரா என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள், கொரோனாவை எதிர்கொள்ள ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்ற சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் 260-க்கு மேற்பட்ட வீடுகளும், சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சரி, தற்போதும் சரி இந்த கிராமத்தில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லையாம்.
மேலும், இந்த கிராமத்தில் கொரோனா பரவல் இல்லாததற்கு முக்கிய காரணம், மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு தான். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முறையாக முக கவசங்களை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
இங்குள்ள கிராமவாசிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்கின்றனர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக 2020 முதலே கொரோனா வைரசை கிராமத்திற்குள் நுழையவிடாமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த கிராம மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்ததுடன், இதுபோல் அனைவரும் செயல்பட்டால் கொரோனா என்ற கொடிய வைரஸை எழிதில் அழித்துவிடலாம்.