நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு: கொரோனாவின் மூன்றாவது அலை தொடக்கமா? அச்சத்தில் மக்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் குறைந்தது. பாதிப்பு குறைந்த வேகத்தை பார்த்தால் தற்போதைய நிலையில் 20 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருக்க வேண்டும். ஆனால், பாதிப்பு 40 ஆயிரமாக உள்ளது.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு மூன்றாவது அலை எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில் பாதிப்பு சற்று அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான அறிகுறியா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
இது குறித்து பேசிய நிபுணர்கள், இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் மூன்றாவது அலை பாதிப்பினை குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் பலியானதாகவும் 42,295 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 3,85,227 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 38 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 41 ஆயிரமாக அதிகரித்தது. இன்று 40 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.