கூல்டிரிங்க்ஸ் குடித்த அடுத்த நொடியே திடீரென வாந்தி... நீல நிறமாக மாறி உயிரிழந்த சிறுமி - மரணத்திற்கு காரணம் என்ன ?
சென்னை பெசன்ட் நகர் சிறுமி குளிர்பானம் அருந்தி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் குறித்த குளிர்பானம் நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைத்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் - காயத்ரி தம்பதியின் மகள் (13) கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே இருந்த மளிகைக் கடையிலிருந்து 10 ரூபாய் குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.
அதைக் குடித்த சற்று நேரத்திலேயே திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கி உடலும் நீல நிறமாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது உறவினர்கள் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்ததற்கு அவர் குடித்த குளிர்பானம் காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்ததால், சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த குளிர்பானத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
சம்மந்தப்பட்ட அந்த மளிகைக் கடையில் இருந்தும் மீதமுள்ள குளிர்பான பாட்டில்களைக் கைப்பற்றினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடந்த 5ம் தேதி சம்மந்தப்பட்ட குளிர்பானத்தை உற்பத்தி செய்த அக்சயா ஃபுட் புரோடக்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்நிறுவனத்தை தற்காலிகமாக மூடிச் சென்றனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் வந்த அதிகாரிகள், நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர்.