சார்ஜ் போட்ட செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்: கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு! எச்சரிக்கை
செல்போன் சார்ஜ் போட்ட போது திடீரென வெடித்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை எற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மயில்சாமி (57). இவரது மகன் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர், கடந்த 10ம் தேதி நள்ளிரவில் கட்டில் மெத்தை மீது செல்போன் வைத்து சார்ஜ் போட்டு உபயோகித்துவிட்டு, பின்பு சார்ஜ் போட்டவாறே தூங்கிவிட்டார்.
அப்போது செல்போன் சார்ஜிங் ஒயரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மெத்தையில் தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதை கவனிக்காமல் தூங்கிய சிவராம் உடையில் தீ பிடித்துள்ளது.
வலி தாங்காமல் கதறிய போது பக்கத்து அறையில் தூங்கிய தந்தை மயில்சாமி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிவராமை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில், சிவராம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.