ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் ஒருங்கே கொண்ட காய்கறிகளின் பட்டியலில் பாகற்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் பாகற்காய் என்றாலே பெரும்பாலானவர்கள் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான். பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயில் கசப்பு தன்மையே தெரியாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு பாகற்காய் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாவக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1
ஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய்
அளவு மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
தனியா தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
வெல்லம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் பாவக்காயை நன்றாகக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து புளித்தண்ணீர் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

கடுகு நன்றாகப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இஞ்சி-பூண்டு விழுதின் பச்சை வாசனை நீங்கியதும், மெல்லியதாக நறுக்கிய பாவக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன் பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக புளிக்கரைசல், சிறிதளவு வெல்லம் மற்றும் தேவையான உப்பை சேர்த்து கிளறவும்.

மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, பிரஷர் முழுவதும் வெளியேறும் வரை காத்திருக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை கொதிக்க விடவும். நன்றாக வற்றியதும் அடுப்பை அணைத்தால், அவ்வளவு தான் கசப்பே தெரியாமல் அசத்தல் சுவையில் பாவக்காய் மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |