தவறான உடல் நிலை முதுகு வலியை ஏற்படுத்தும்! தடுக்கும் வழிமுறை நிபுண விளக்கம்
முறையற்ற உடல் தோரணையானது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அது முதுகு வலியை உண்டாக்கும்.

முறையற்ற உடல் தோரணை
இன்றைய வேகமான வாழ்க்கையில், முதுகுவலி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது.
ஒரு காலத்தில் இது வயதாவதால் ஏற்படும் ஒரு பிரச்சனையாகக் இருந்தது. ஆனால் இன்று வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் குறைந்த உடல் செயல்பாடு ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு காரணமாகி வருகிறது.
ரீஜென்சி மருத்துவமனையின் எலும்பியல் ஆலோசகரான டாக்டர் பிரதீக் குமார் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி பேசி உள்ளார்.

எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது?
தவறான உடல் தோரணையின் விளைவுகள் உடனடியாகத் தெரியாது. ஆனால் காலப்போக்கில் அவை தீவிரமடையக்கூடும்.
நாம் நாற்காலியில் சாய்ந்து அமரும்போதும், முதுகுக்கு ஆதரவின்றி வேலை செய்யும்போதும், அல்லது கைப்பேசியைப் பார்த்தபடி கழுத்தை வளைக்கும்போதும், முதுகெலும்பு அதன் இயல்பான அமைப்பிலிருந்து விலகத் தொடங்கும்.
இது தசை இறுக்கம், விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. இந்த வலி படிப்படியாக இடுப்பிலிருந்து கழுத்து மற்றும் தோள்பட்டைகளுக்குப் பரவக்கூடும்.

மேலும், நிற்கும்போதும் நடக்கும்போதும் ஏற்படும் சமநிலையின்மையும் இந்தப் பிரச்சனையை அதிகப்படுத்தக்கூடும்.
உதாரணமாக ஒரு காலில் அதிக எடையுடன் நிற்பது அல்லது முன்னோக்கி வளைந்த நிலையில் நடப்பது இடுப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இப்போதெல்லாம், மக்கள் தங்கள் கழுத்தை வளைத்தபடி மணிக்கணக்கில் மொபைல் போன்களை பார்ப்பதால், 'டெக்ஸ்ட் நெக்' எனப்படும் கழுத்துச் சுருக்கப் பிரச்சனையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த பாதிப்பு கழுத்துடன் மட்டும் நின்றுவிடாமல், முழு முதுகெலும்பையும் இடுப்பையும் பாதிக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள்?
முதுகு வலியைத் தவிர்க்க, உங்கள் பழக்கவழக்கங்களில் சரியான உடல் தோரணையை பின்பற்றுவது அவசியம்.
உட்காரும்போது, எப்போதும் உங்கள் முதுகை நேராக வைத்துக்கொண்டு இருக்கையில் முழு ஆதரவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
பாதங்கள் தரையில் தட்டையாக இருக்க வேண்டும் மற்றும் முழங்கால்கள் ஏறக்குறைய 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.
கணினி அல்லது மடிக்கணினித் திரையைக் கண் மட்டத்தில் வைத்திருங்கள், அப்போது அடிக்கடி குனிய வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு 30 முதல் 40 நிமிடங்களுக்கும் ஓய்வு எடுத்து, எழுந்து நடமாடுங்கள்.
இது தசை அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், வழக்கமான உடற்பயிற்சியும் யோகாவும் முதுகு வலியைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புஜங்காசனம், தடாசனம் மற்றும் மர்ஜரி ஆசனம் போன்ற யோகாசனங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தி, அதன் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கின்றன. இவற்றை பின்னபற்றினால் முதுகு வலியை தவிர்க்கலாம் என நிபுணர் விளக்கி உள்ளார்.