தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி
Anant Ambani comes to Iqbal's help for his rare medical condition : மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் வித்தியாசமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழித்து வந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.
உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி
தண்ணீருக்குள் அமர்ந்தபடியே உணவு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிடும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனுக்கு, தண்ணீரிலிருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும், தீப்பற்றி எரிவது போன்ற உணர்வும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினை காரணமாக, அவர் நீண்ட நேரம் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் மட்டுமே நீரில் இருப்பதைப் பார்க்கும் நிலையில், இந்தச் சிறுவன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.


மேலும், தண்ணீருக்குள் இருந்தபடியே உணவு சாப்பிடுவது, நொறுக்குத்தீனி உண்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிறுவனின் உடல்நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக முயற்சி செய்ததாகவும், பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக நீண்டகால மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதில் சிக்கல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிறுவனின் நிலை குறித்து அறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.
இதையடுத்து, சிறுவன் சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவரது உடல்நிலை குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |