கண் பார்வையை சீராக்கும் கேரட் பெரியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
அன்றாடம் உணவுகளில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் கேரட் முக்கிய இடம் வகிக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் இதுவும் ஒன்று.
கேரட்டில் நமது உடலுக்கு தேவையான பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் செரிந்து காணப்படுகின்றது.

மேலும் கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் நீர்சத்துக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுவதுடன் செரிமான ஆரோக்கயத்தையும் மேம்படுத்துகின்றது.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து காணப்படுவதால், கண் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி கேரட்டை எடுத்துக் கொள்ளலாம்.
மங்கலான பார்வை, பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் இருந்தால் தினசரி ஒரு கேரட்டை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும், கூந்தல் வளர்ச்சி முதல், சரும ஆரோக்கியம் வரையில், கேரட் சாப்பிடுவது பெரும் பங்கு வகிக்கின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கேரட்டில் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 4, துருவியது
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
துருவிய தேங்காய் - 1/2 கப்
மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகையளவு
தண்ணீர் - கால் கப்

தாளிக்க தேவையானவை
சமையல் எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுந்து - 1 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடியளவு

செய்முறை
முதலில் கேரட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர், தோல் சீவி, துருவி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தேங்காயைத் துருவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின்னர் பெருங்காயத்தை சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு,பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
கேரட் நன்றாக வதங்கும் வரையில், மிதமான தீயில் வேகவிட், கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்து கிளறிவிட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கேரட் பெரியல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |