அதிமுக பொதுக்குழு... பரபரப்பான நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு! சலசலப்புடன் நிறைவு
அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போதும் நடைபெறுவதை விட இந்த முறை பரபரப்பாக நடைப்பெற்றது. அம்மா ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் நிரந்தர ஒற்றை தலைமையாக இருந்தார். அவரது மறைவிற்கு பிறகு யார் கட்சியை கைப்பற்றுவதில் தொடங்கிய பிரச்சனை 5 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முடிவடையவில்லை.
பொதுக்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றபோது கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.
இதன்பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். ஒற்றை தலைமை நாயகன் என பழனிசாமியை குறிப்பிட்டு ஜெயக்குமார் மேடையில் பேசினார்.
இதனால் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்நிலையில், பொதுக்குழுவில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.\
மேலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால் தான் அடுத்த, பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து வெளியேறினர். இதனால், பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய ஒ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.