Actor Abhinay: உறங்கிய நிலையில் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த அபிநய் உடல்நலக் குறைவினால் இன்று காலமானார்.
நடிகர் அபிநய்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவர் தான் அபிநய்.
அதன் பின்பு சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற பல படங்களில் நடித்தாலும் சரியாக அப்படங்கள் வெற்றி பெறவில்லை. என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.
விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தவரும் இவர் தான். நாட்கள் செல்ல செல்ல சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார்.

கல்லீரல் தொற்று
கடந்த சில மாதத்திற்கு முன்பு உடல் எடை மெலிந்த நிலையில், அடையாளம் தெரியாமல் காணப்பட்டார். இவருக்கு கல்லீரல் தொற்று இருப்பதாகவும், இதற்காக சிகிச்சைக்கு 28 லட்சம் தேவைப்படுவதாகவும் காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பாலா நேரடியாக அபிநய் வீட்டிற்கு சென்று ரூபாய் 1 லட்சத்தை கொடுத்து உதவியதுடன், நடிகர் தனுஷும் அபிநய் மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார்.
பாலா நடிப்பில் உருவான காந்திக் கண்ணாடி திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அதற்கு அபிநய்யை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
அபிநய்யிடம் உடல்நிலை சரியான பின்பு சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் பாலா கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் உடல்நலக் குறைவினால் தூக்கத்தில் அபிநய்யின் உயிர் பிரிந்துள்ளது.
அபிநய்யின் இறுதி சடங்கு செய்வதற்கு யாரும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் அபிநய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |