உறவுகளை விட்டு வெளிநாடு செல்பவர்களின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாட்டு வாழ்க்கை என்பது பலருக்கும் ஒரு பொறாமை ஏற்படுத்தும் வகையாகவே காணப்படுகின்றது.
ஆனால் வெளிநாட்டில் உறவுகளை விட்டு, சொந்தங்களை விட்டு பிரிந்து அங்கு வேலை செய்பவர்களின் கஷ்டம் வெளிப்படையாக பார்க்கும் நமக்கு தெரிவதில்லை.
வீட்டு சூழ்நிலையினை மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கையினை தியாகம் செய்து தனிமையில் சென்று வெளிநாட்டில் தவிப்பவர்களின் எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டு, சொந்த நாட்டிற்கு வந்த பின்பு அவர்களின் வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் பல நடுத்தர மக்களின் வாழ்க்கையே இவ்வாறு தான் நடக்கின்றது.
22 வயதில் வெளிநாடு செல்பவர்களின் நிலை, தம்பி படிக்கிறான், அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும்
இவர்களின் 24 வயது தருணத்தில், அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் அடைக்கனும், அடுத்து தங்கச்சி கல்யாணம், தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் அதனால் இன்னும் இரண்டு வருடம் வேலை செய்யணும்.
மீண்டும் 26 வயதில், தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும், தொழில் வைத்துக் கொடுப்பதற்கு பணம் வேண்டும் என்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டு.
வயது 28 ஆகும் பொழுது, அப்பா அம்மா தனக்கு பொண்ணு பார்க்கறாங்க... கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம்.
30 வயதில் கல்யாணத்துக்கு வாங்கின கடன், பட்ட கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும்.
வயசு 32ல் தனக்குன்னு சின்னதா ஒரு குடும்பம் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப பணம் வேண்டும் அதற்காக இன்னும் 2 வருடம்.
பின்பு 34 வயதில், ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கலை என்பதற்காக ஒரு 6 வருடம்.
40 வயதில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டது, அவர்களின் மேல் படிப்பிற்கு பணம் வேண்டும் இன்னும் 10 ஆண்டுகள் உழைக்கலாம் என்ற எண்ணம்.
வயது 50ல் மேல் படிப்பு முடிந்து பிள்ளைகளக்கு வேலை அதன்பின்பு திருமணம் செய்யவேண்டும் என்ற சூழ்நிலை.
ஒரு 57 வயதில் கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.. அதனால ஒரு 4 வருடம்
இதற்கு பின்பு இறுதியாக 61 வயதில், உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து நல்ல வேலையா தேடிகிட்டு, புள்ளை குட்டிகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கலாம் என்ற மகிழ்ச்சியோடு சொந்த ஊருக்கு திரும்பினால்?
இறுதியாக அனைவரும் கேட்கும் கேள்வி எங்களுக்குன்னு என்ன செய்தீர்கள் என்று தான்... இதுதான் உண்மையான வெளிநாட்டு வாழ்க்கை... நடுத்தர மக்களின் வெளிநாட்டு வாழ்க்கை என்பது ஆடம்பரம் இல்லை... அதன் பின்னே இவ்வளவு வலிகள் நிறைந்திருக்கின்றது.