60 வயது தினக்கூலி தொழிலாளி ஸ்டைலிஷ் மாடலான ஆச்சரியம்....!
கேரளாவில் ஸ்டைலிஷ் மாடலான 60 வயது தினக்கூலி தொழிலாளியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம்தான் மம்மிக்கா.
தினக்கூலியாக இருந்துவரும் அவர் ஒரே நாளில் உலக பிரபலம் ஆகியுள்ளார். பொதுவாக லுங்கியும் சட்டையும்தான் இவருடைய ஆடை. ஒருநாள் இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார் மம்மிக்கா.
அப்போது, புகைப்படக் கலைஞர் ஷரீக் இவரை வயலில் வைத்து பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் சில ஃபோட்டோக்களை எடுத்துக்கொண்டு ஷரீக், அவரிடம் ’நீங்கள் நடிகர் விநாயகனைப் போலவே இருக்கிறீர்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு. இது நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் ஷரீக் தனது ஆடையகத்திற்காக விளம்பர மாடலைத் தேடினார்.
ஒரு வார இடைவெளியில் எத்தனையோ பேரை பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. பின்னர் மம்மிக்காவிடமே கேட்டுவிட்டார். மம்மிக்காவும் ஒப்புக்கொள்ள, அவரது கெட்டப் முழுமையாக மாற்றப்பட்டது.
முடி திருத்தம், ஃபேஷியல், கோட் சூட், கூலர்ஸ் எனக் கூலாக ஐபேடுடன் லேப்டாப்புடன் மம்மிக்கா கொடுத்த போஸ் கொடுக்க, அதனை ஷரீக் ஸ்டைலாக போட்டோ எடுக்க அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது.
இதுகுறித்து தெரிவித்த மம்மிக்கா, ‘தினக்கூலியாக வேலை செய்வதற்கு மத்தியில் மாடலாகவும் செயல்பட விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கென்று புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். அதில், இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக கேரளாவில் திருமணத்துக்கு முந்தைய ப்ரீ வெட்டிங் போட்டோ ஷீட் வைரலாவது வழக்கம். தற்போது கூலித் தொழிலாளி ஒருவருடைய போட்டோ ஷூட் வைரலாகியுள்ளது.