சில்லறை காசுகளை அள்ளிக்கொடுத்து கார் வாங்கிய இளைஞர்! வியக்க வைக்கும் காரணம்
தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து இளைஞர் ஒருவர் கார் வாங்கிய சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தருமபுரியின் அரூரை சேர்ந்த ரவி என்பவரது மகன் வெற்றிவேல், அப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வெற்றிவேல் 6 லட்ச ரூபாய்க்கு புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார், அதுவும் 10 ரூபாய் நாணயங்களாக.
இதற்கு முதலில் கார் நிறுவனத்திடம் கலந்து ஆலோசித்து வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற பின்னர் காரை வாங்கியுள்ளார் வெற்றிவேல்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவலாக பேசப்படும் நிலையில், அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்துள்ளாராம் வெற்றிவேல்.

இதற்காக மாதக்கணக்கில் கோவில்கள், வணிக வளாகங்கள், தெருவோர கடைகள் என அலைந்து திரிந்து காரை வாங்கியுள்ளார்.
கார் வாங்கும் நாள் அன்று சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த 10 ரூபாய் நாணயத்தை தனது உறவினருடன் எடுத்துச் சென்று கார் நிறுவன வளாகத்தில் கொட்டியுள்ளார் வெற்றிவேல்.
அதை பிரித்துக் காண்பித்து 6 லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயமாக வழங்கினார், இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட காருக்கான சாவியை கார் நிறுவன அதிகாரிகள் வெற்றிவேலுக்கு வழங்கினர்.
கார் வாங்கிய சந்தோஷத்துடன் தன் குடும்பத்தினரை காரில் அமரவைத்து ஊருக்கு புறப்பட்டு சென்றார் வெற்றிவேல்.