கலெக்டர் வழிகாட்டலில் அசத்தும் பெண்கள்! மாஸ்க் தயாரிப்பில் லட்சக்கணக்கில் வருவாய்
கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது.
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல மூடப்பட்டு வரும் சூழலில் தெலங்கானாவைச் சேர்ந்த Self Help Group (SHG) என்ற பெண்கள் குழு மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர்.
சுமார் 3 ஆயிரம் பெண்கள், இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் தங்கள் குடும்பங்களை மாஸ்க் தயாரித்து காப்பாற்றி வருகின்றனர்.
நாராயணன்பேட் மாவட்டத்தைச் ( முன்னர் மகபூப் நகர் மாவட்டம்) சேர்ந்த பெண்கள் குழு, சவாலான கொரோனா காலத்தை தங்களுக்கு சாதகமான நேரமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
மாஸ்க் தயாரிப்பிற்காக, நாராயணன்பேட் மாவட்ட கலெக்டர் ஹரிசந்தனா அப்பகுதி பெண்கள் குழுவுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதனை மூலதனமாகக் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் அறிவுரை மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
சுமார் 6 லட்சம் மாஸ்க்குகளை தயாரித்த அந்தக் குழு 25 முதல் 30 லட்சம் ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளனர்.
அரசு நிறுவனங்கள், ஐ.டி கம்பெனிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மிகப்பெரிய ஆர்டர்களை SHG குழுவுக்கு அளிக்கின்றனர்.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம், எப்.ஐ.சி.சி.ஐ, ராம்கி நிறுவனங்களும், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, தபூ, பராகான் உள்ளிட்டோரும் இந்த பெண்கள் குழுவிடம் மாஸ்க்குகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
சாப்ட்வேர் கம்பெனியான டெலாய்ட் சுமார் 63, 000 மாஸ்க்குகளை ஆர்டர் கொடுத்தது. தற்போது 2வது அலை கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் SHG பெண்கள் குழுவுக்கு மாஸ்க் ஆர்டர்கள் மேலும் குவியத் தொடங்கியுள்ளன.
இதனால், இரவு பகலாக அவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.