லிஃப்ட்களில் கண்ணாடி ஏன் வைக்கப்படுகிறது? பின்னணியில் இருக்கும் ரகசியம்!
The Real Reason Lifts have Mirrors: உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள கட்டடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்களின் லிஃப்ட்டிற்குள் கண்ணாடி இருப்பதை நாம் கவனித்திருப்போம். லிப்ட்டில் ஏறியவுடன் பலரும் முதலில் செய்வது தங்களது முகத்தையும் தோற்றத்தையும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுதான்.
இதனால், “லிஃப்ட்டுக்குள் கண்ணாடி வைப்பது நம்முடைய தோற்றத்தைச் சரிபார்த்துக்கொள்வதற்காகத்தான்” என்று பெரும்பாலானவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அந்தக் கண்ணாடிக்குப் பின்னால் பல முக்கியமான உளவியல் மற்றும் நடைமுறை காரணங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

லிஃப்ட்டுக்குள் கண்ணாடி உண்மையில் எதற்காக?
ஒரு லிஃப்ட்டுக்குள் நுழைந்தவுடன், அது ஒரு சிறிய மற்றும் மூடிய இடமாக இருப்பதை உணர முடியும். குறிப்பாக ஒரே நேரத்தில் பலர் பயணிக்கும்போது, அந்த இடம் இன்னும் குறுகலாகத் தோன்றலாம். இந்த உணர்வை ஓரளவு குறைத்து, பயணிகளுக்கு வசதியான மனநிலையை ஏற்படுத்துவதில் கண்ணாடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

லிப்ட் போன்ற மூடிய மற்றும் வரையறுக்கப்பட்ட இடங்களில் சிலருக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா (Claustrophobia) எனப்படும் குறுகிய இடங்களைப் பற்றிய பயம் அல்லது பதற்றம் ஏற்படலாம். இந்த பிரச்சினையை கண்ணாடி சரிசெய்கின்றது.
லிஃப்ட் மேலே அல்லது கீழே நகரும்போது ஏற்படும் இந்த மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு எளிய வடிவமைப்பு முறையாக கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கண்ணாடி இருப்பதால், லிப்ட்டின் சுவர்கள் நமக்கு நேரடியாகத் தெரியாமல், அதற்குள் மேலும் ஒரு இடம் இருப்பது போன்ற தோற்றம் உருவாகிறது. இதன் மூலம் லிப்ட் உண்மையில் இருப்பதைவிட சற்று விசாலமாக இருப்பது போன்ற காட்சி மாயை ஏற்படுகிறது.
இந்த விசாலமான உணர்வு, குறுகிய இடத்தில் இருப்பதாக ஏற்படும் மன அழுத்தத்தை ஓரளவு குறைத்து, பயணிகள் மிகவும் அமைதியாகவும் வசதியாகவும் பயணிக்க உதவுகிறது.
கண்ணாடியின் மற்றொரு முக்கியப் பயன் சுற்றுப்புறத்தை கவனிக்க உதவுவது. லிப்ட்டில் பலர் ஒன்றாகப் பயணிக்கும்போது, நமக்குப் பின்னால் யார் நிற்கிறார்கள் என்பதை நேரடியாகத் திரும்பிப் பார்க்க முடியாத சூழல் இருக்க்கும்.

கண்ணாடி இருந்தால், அதன் பிரதிபலிப்பு மூலம் லிஃப்ட்டின் மற்ற பகுதிகளையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஓரளவு கவனிக்க முடியும். இதனால் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு கிடைக்கிறது.இதுவும் லிப்டினுள் கண்ணாடி வைப்பதற்கு முக்கிய காரமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் , சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் அல்லது உடலைத் திருப்புவதில் சிரமம் உள்ளவர்கள், லிப்ட்டில் பின்னோக்கி நகரும்போது தங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம். அப்போது கண்ணாடி ஒரு பார்வை உதவியாக செயல்படுகிறது.
கண்ணாடியின் பிரதிபலிப்பைப் பார்த்து பின்னால் உள்ள இடத்தை அறிந்துகொண்டு, சக்கர நாற்காலியை பாதுகாப்பாக நகர்த்துவதற்கு துணைப்புரிகின்றது.

இதனால், லிப்ட் வடிவமைப்பில் கண்ணாடி என்பது வெறும் அலங்காரப் பொருள் அல்ல; அனைவரும் லிஃப்ட்டை எளிதாகவும் வசதியாகவும் பயன்படுத்துவதற்கான ஒரு வடிவமைப்பு அம்சமாகவும் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
உண்மையில் லிப்ட்டில் உள்ள கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவோ வைக்கப்படவில்லை.
என்றாலும் இது அதற்கும் பயன்படுகின்றது. குறிப்பாக நேர்முக தேர்வுகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு செல்பவர்களுக்கு சீக்கிரமாக தங்களின் தோற்றத்தை சரிபார்த்து கொள்ளவும் லிஃப்ட்டில் உள்ள கண்ணாடி உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |