170 படங்களில் நடித்த பிரபல நடிகர்... இன்று முதியோர் இல்லத்தில் கண்ணீருடன் மோகன் சர்மா!
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறையின் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா.
இன்று, 80 வயதில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகர் மோகன் சர்மா
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்திய கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவரான மோகன் சர்மா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 20 திரைப்படங்களை தயாரித்து, திரைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்தார். தமிழ் ரசிகர்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமான முகம். விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார்.

மேலும் சலங்கை ஒலி, ஏணிப்படிகள், நாடகமே உலகம், தூண்டில் மீன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிறிய திரையிலும் தனது முத்திரையை பதித்த அவர், நடிகை தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார்.
நடிகராக மட்டுமல்லாமல், திரைப்படத் துறையின் நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றியவர் மோகன் சர்மா. 2002ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவிலும், சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்திய பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும், தாதா சாகேப் பால்கே சாதனை விருதில் தென்னிந்தியாவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி அதை பெற்றுத்தந்தவர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.
2012ஆம் ஆண்டு அவர் இயக்கிய நம்ம கிராமம் திரைப்படம், ஜாதி அடக்குமுறையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் தமிழக அரசும் கேரள அரசும் வழங்கிய விருதுகளை வென்றது.3

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தப் படத்தைப் பாராட்டி, தாம் மிகவும் விரும்பும் திரைப்படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதாக மோகன் சர்மா பின்னர் தெரிவித்துள்ளார்.
மோகன் சர்மாவுக்கு ஏன் இந்த நிலை?
ஆனால் மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது சோகமான நிலையில் உள்ளது. நடிகை லட்சுமியை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அவர், சாந்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
தற்போது 80 வயதாகும் மோகன் சர்மா, கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு உணவும் தங்குமிடமும் கிடைத்தாலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து வாங்க கூட பணமின்றி அவர் சிரமப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை தொடர்புகொண்டு வங்கி விவரங்களை பெற்று ரூ.1 லட்சம் உதவி செய்துள்ளார்.
இது குறித்து மோகன் சர்மா கூறுகையில், தனது ‘நம்ம கிராமம்’ படத்தை தயாரிக்க வங்கிக் கடன் பெற்றும், சொத்துகளை விற்றும் பணம் செலவிட்டதாகவும், அந்தப் படத்தை ஜெயலலிதா மிகவும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த கடனை அடைக்க உதவுவதாக ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால் அது நிறைவேறவில்லை என்றும் கூறியுள்ளார். “கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் முதியோர் இல்லத்திற்கு வந்தேன். உடல்நலக் குறைபாடுகளால் மருந்து வாங்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் கடவுள் போல உதவினார்”.
மேலும், சினிமாவில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனது ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால், தனது மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஃபிலிம் சேம்பரில் இருந்தபோது, வயதான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் தீர்மானம் கொண்டுவந்ததாகவும், ஆனால் தற்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தனது மகன் ஜெர்மனியில் இருப்பதாகவும், அவனது எதிர்காலத்திற்காக அவனை அங்கு அனுப்பியதாகவும் கூறிய மோகன் சர்மா, தற்போது தனிமையில் இருப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |