தன் உடலின் பாகத்தையே சாப்பிடும் உயிரினங்கள்! இந்த வினோத பழக்கம் ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்கள் உட்பட எந்த ஒரு உயிரினமும் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படை காரணிகளுள் உணவு இன்றியடையாதது என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஒரு உயிரினம் எப்போதும் உணவாக இன்னொரு தாவரத்தையோ அல்லது உயிரினத்தையோ தான் உட்கொள்ளும்.

ஆனால் சில உயிரினங்கள் தங்களின் உடலையே உணவாக மாற்றிக்கொள்ளும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் குறிப்பிட்ட சில உயிரினங்கள் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்ய, ஆற்றலைச் சேமிக்க, நெருக்கடியான நிலைகளின் போது என பல்வேறு காரணங்களுக்காக தங்களின் சொந்த உடலின் பாகங்களை உட்கொள்கின்றன என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எந்த உயிரினங்கள் இவ்வாறு தங்களையே உணவாக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது என்பது தொடர்பிலும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
இயற்கையில் சில உயிரினங்கள் நெருக்கடியான நிலையில், உயிர்வாழ்வதற்காகவோ அல்லது உடல் மாற்றத்திற்காகவோ தங்கள் உடலின் பாகங்களையே உண்ணும் வினோதமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. இதனை அறிவியல் ரீதியில் ஆட்டோபேகி (Autophagy) அல்லது தன்-உண்ணி பழக்கம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆக்டோபஸ் - ஆக்டோபஸ்கள் சில நேரங்களில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும்போது, அவை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாகவும் அந்த சமயத்தில் தங்கள் கைகளைக் தாங்களே கடித்து சாப்பிடவோ அல்லது துண்டிக்கவோ செய்கின்றன என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பாம்பு - பாம்புகள் சில நேரங்களில் கடும் வெப்பத்தின் காரணமாகவோ அல்லது அதீத பசியின் விளைவாகவோ குழப்பமடைந்து நகரும் தனது சொந்த வாலையே வேறொரு இரை என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.

சிலந்தி - சிலவகைச் சிலந்திகளில், பெண் சிலந்தி ஆண் சிலந்தியை இணைசேர்க்கை செய்த பின்னர் சாப்பிட்டுவிடும் என்று குறிப்பிடப்படுகின்றது. சில நேரங்களில் ,குஞ்சுகள் பொரித்த பிறகு தாய் சிலந்தி தனது உடலையே குஞ்சுகளுக்கு உணவாகத் கொடுப்பது உண்டு.
பல்லி - பல்லிகள் தாக்கப்படும்போது எதிரியின் கவனத்தைத் திசைதிருப்ப தங்கள் வால்களை துண்டித்துக்கொள்ளுமாம். தப்பித்த பிறகு, அவற்றில் சில பல்லிகள் துண்டிக்கப்பட்ட வாலை சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டுள்ளது.

தவளை - தவளைகள் மற்றும் தேரைகள், புரதங்களை மறுசுழற்சி செய்வதற்கும், வாசனைத் தடயங்களை அழிப்பதற்கும் வழக்கமாக தங்கள் தோலை உதிர்த்து சாப்பிடும் இயல்பை கொண்டுள்ளன.
வெட்டுக்கிளிகள்- உணவில் புரதச் சத்து குறையும் போதோ அல்லது அதிக நெருக்கடியான இடங்களில் சிக்கிக்கொள்ளும் பட்சத்திலோ சில வெட்டுக்கிளிகள் தங்கள் சொந்த இறக்கைகளைத் தாங்களே கடித்து சாப்படும் பழக்கத்தை கொண்டுள்ளது.

நண்டுகள் - இறால்கள் -இவை வளரும்போது தங்கள் கடினமான வெளித்தோட்டையை உரித்துவிடும் இயல்புடையவை. அதன் பின்னர் அதில் உள்ள கால்சியம் மற்றும் தாதுக்களை மீண்டும் பெறுவதற்காக, உரித்த அந்த ஓட்டையே மீண்டும் உணவாக்கிக்கொள்ளும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |