ஓட்டு கேட்டு யாரும் வராதீர்கள்.. கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு! வைரலாகும் நோட்டீஸ்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் ஒன்றியம் தாழானூர் ஊராட்சியில், பரிவீர மங்களம் ஆதிதிராவிட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 3 முறையும், முதலமைச்சருக்கு 2 முறையும், ஆதிதிராவிட அமைச்சருக்கு 2 முறையும், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு 10 முறையும் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக விளம்பர நோட்டீஸ் ஒன்றை ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வைத்துள்ளனர். அதில், வரும் 2021 தேர்தலை நாங்கள் புறக்கணிப்பு செய்கிறோம்.
எனவே யாரும் எங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என உறுதியுடன் அறிவிக்கின்றோம் என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.