விவேக்கின் கடைசி ஆசை இதுதான்... நிறைவேறாமல் போனதே! கலங்கும் பிரபலம்
நடிகர், சமூக ஆர்வலர் என பன்முக திறமை கொண்ட விவேக்குக்கு, படங்களை இயக்க வேண்டும் என ஆசை இருந்த நிலையில், அது நிறைவேறாமல் போனதாக கவலை தெரிவித்துள்ளார் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்.
மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படங்களை இயக்க ஆசைப்பட்டு, அதற்கான வேலைகளும் நடந்த நிலையில், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போனதாக தெரிவித்துள்ளார் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்.
அவர் மேலும் கூறுகையில், நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம்.
கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
இதற்காக பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.