கையெடுத்து கும்பிட்டு கதறிய விவேக்கின் மனைவி! உருக்கத்துடன் பேசியது என்ன?
மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகரும், 'சின்னக் கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது வரை விவேக்கிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவருடைய மகள்கள் ஆகியோர், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அருள்செல்வி கூறுகையில், "என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில், என் குடும்பத்துக்கு பக்கபலமாகவும் மிகப்பெரும் துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி.
என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நாங்கள் நன்றியுடன் நினைத்துப்பார்ப்போம். இது என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசிவரை நீங்கள் எங்களுடன் நின்றீர்கள். அதற்கு நன்றி.
ஊடகத்துறை சகோதரர்களுக்கும் நன்றி. உலகமெங்கும் உள்ள மற்றும் நேற்று வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய கோடானகோடி ரசிகர்களுக்கு என்றும் நன்றி" என தெரிவித்தார்.