sunday special: கிராமத்து பாணியில் நாட்டு கோழி குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து ஆறுதலாக சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.
அந்தவகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக கிராமத்து பாணியில் அசத்தல் சுவையில் நாட்டு கோழி குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழிக்கறி - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 3
சிவப்பு மிளகாய் - 4
தனியா - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1(முழு)
கசகசா - 1 தே.கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கோழி இறைச்சியை நன்றாக சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். விரும்பினால் சின்ன வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியை போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
கறி நன்றாக வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு நீர் ஊற்றி நன்றாக குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவினால், அவ்வளவு தான் சுவையான கிராமத்து நாட்டு கோழிக் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |