பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் சுவையான பிரட் மசாலா- செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து சாப்பிடும் சுவையான பிரட் மசாலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2 (பெரியது)
காரட் - 1 (பெரியது)
இஞ்சி - சிறியது
வெள்ளைப் பூண்டு - 3 பற்கள்
கொத்தமல்லி இலை - 2 கொத்து
மசாலா பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ¼ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
செய்முறை
முதலில் பிரட்டை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன்பின்னர், இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும். தக்காளியை அலசி பொடியாக வெட்டவும்.
காரட்டை அலசி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும். கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கேரட்டைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன்பின்னர், தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். அதில் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
மசாலா பொடி வகைகளைச் சேர்த்ததும், மசாலாப் பொருட்களின் பச்சை வாசனை போனதும் சதுரமாக்கிய பிரட் துண்டுகளைச் சேர்த்து ஒரே சேர கிளறவும்.
பிரட் துண்டுகளைச் சேர்த்ததும் அடுப்பினை அணைத்துவிட்டு நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கிவிடவும். இப்போது சுவையான பிரட் மசாலா தயார்.