அருமையான வடை கறி சாப்பிடனுமா? இதோ ஓட்டல் சுவையில் செய்து அசத்துங்கள்
பூரிக்கு அருமையான வடை கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு - 150 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- பெரிய தக்காளி - ஒன்று
- கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
- இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 5, லவங்கம்
- பட்டை, ஏலக்காய் – தலா 2
- பிரிஞ்சி இலை - ஒன்று
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் - விருப்பத்திற்கேற்ப
- பொட்டுக் கடலை மாவு - 3 டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியில் பொட்டுக் கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாறலாம்.