யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய மாற்றம்: மோசடிக்கு முற்றுப்புள்ளி?
யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடியைத் தடுக்க ஜூன் 30 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இனி, பணம் பெறுபவரின் பெயர் வங்கிக் கணக்கில் உள்ளபடியே காட்டப்படும். இதன் மூலம் சரியான நபருக்கு பணம் அனுப்பப்படுவதை உறுதி செய்ய முடியும்.
கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ பேமெண்ட் ஆப்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளானது, கையில் காசு வைத்து செலவு செய்யும் பரிவர்த்தனைகளைவிட பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. பொட்டிக் கடைக்கு சென்றால்கூட கூகுள் பே இருக்கா? போன்பே இருக்கா? என்று கேட்கும்படி மாறிவிட்டது. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த நிலையில் அதில் மோசடி ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளது.
ஜூன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறை
யு.பி.ஐ., எனப்படும், 'மொபைல்போன்' வாயிலாக நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடியைத் தடுக்க, வரும் ஜூன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம், மொபைல் போன் வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை கண்காணித்து கட்டுப்படுத்துகிறது.
பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, நாம் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது, அவருடைய பெயரை நம் மொபைலில் எப்படி பதிவு செய்துள்ளோமோ அதை பயன்படுத்தி அனுப்புகிறோம். அதுபோல, மற்றவரின் மொபைல் எண்ணை பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம் அல்லது க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பும்போது, பணத்தைப் பெறுபவர், தன் பெயரை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும். இது மோசடிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சரியான பெயரை காட்டிக்கொடுக்கும்
மோசடிக்காரர்கள், பொய்யான பெயரைக் காட்டி பணம் பெற்றுவிடுவர். இதைத் தடுக்கும் வகையில், வரும் ஜூன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறையை செயல்படுத்த, என்.பி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி பரிவர்த்தனை செய்யும்போது, பணத்தை பெறுபவரின் பெயர், அவருடைய வங்கிக் கணக்கில் எப்படி உள்ளதோ அதையே காட்டும். இதன் வாயிலாக, சரியான நபருக்குத்தான் பணத்தை அனுப்பியுள்ளோம் என்பதை நாம் உறுதி செய்து கொள்ள முடியும். மேலும், வங்கிகள், என்.பி.சி.ஐ., மற்றும் விசாரணை அமைப்புகளுக்கும், மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தவும் இது உதவும்.
பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் பணபரிமாற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
