டிடிவி தினகரன் வீட்டில் அரங்கேறிய விசேஷம்! குடும்பத்தை இணைக்கிறாரா சசிகலா?
டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட திருமணம் இன்று நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருமணம் நடத்துவதற்காக அனுமதி கோரபட்டது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. எனவே திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் மணமக்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். கூட்டநெரிசலை தவிர்க்க திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூன்று வேளைகளும் அறுசுவை உணவுகள் தயாராக விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அமமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத சூழல் உள்ளது. விரைவில் அவர்களுக்கு நல் விருந்து ஒன்று அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனால், அமமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் திருமண விழா குறித்த புகைப்படங்களையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தினகரன் மகள் திருமணத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்வார்கள்,
இதனால் சசிகலாவின் ரீஎண்ட்ரி இதன் மூலம் எளிதில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான நிகழ்வுக்கு இன்று வாய்ப்பில்லை. கட்சியில் தான் சமரசம் செய்ய முடியவில்லை என்றாலும் குடும்பத்துக்குள் சமரசம் செய்துவிடலாம் என திட்டமிட்டுள்ளாராம் சசிகலா.
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், தினகரனுக்குமிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில் திருமணத்திற்காக ஒன்றிணைந்துள்ள இச்சமயத்தில் இருவரிடமும் சசிகலா பேசுவார் என்கிறார்கள்.