ஒரே குடும்பத்தில் விஷ மாத்திரை கொடுத்து 3 பேர் கொலை: நம்பமுடியாத பகீர் காரணம்
வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டி கேட்டதால் விஷ மாத்திரை கொடுத்து குடும்பத்திலுள்ள 3 பேரை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணண் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா. மகள் தீபா. இவர்களது தோட்டவீடு பணியாளர் குப்பம்மாள்.
இந்நிலையில், நேற்று கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து வருவதாக கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டதில் மல்லிகா சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
மீதமுள்ள 3 பேரில் கருப்பண்ண கவுண்டர், அவரது மகள் தீபா கோவை தனியார் மருத்துவமனையிலும், தோட்ட பணியாள் குப்பம்மாள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த பொலிசார் அதே பகுதியை சேர்ந்த கல்யாண சுந்தரம் மற்றும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போத்திஸ் குமார் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பண்ண கவுண்டரிமிடருந்து வாங்கிய ரூ.7 லட்சம் கடனுக்கு அதிகமாக வட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணசுந்தரம், போத்தீஸ்குமாரிடம் விஷ மாத்திரையை கொடுத்து அனுப்பி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும், போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த குப்பம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபாவும் உயிரிழந்தார்.
தற்போது, அதே கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பண்ண கவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
