யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்த சிறுவர்கள்.... தஞ்சையில் பரபரப்பு
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த வெடிகுண்டு காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட இரண்டு சிறுவர்கள் காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்தைத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் ஹரிபாலாஜி.
இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தஞ்சையில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்சந்த்குமார் என்ற இளைஞரோடு தொடர்பு ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது பற்றி தெரிந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் சாலையில் யூடியுப் பை பார்த்து தயாரித்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
அதனை அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் (வயது 17) வீடியோ எடுத்து நேற்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாச்சியார்கோவில் காவல்நிலையத்தார் வெடி குண்டு தயாரித்த ஹரி பாலாஜி மற்றும் அதனை வீடியோ எடுத்த அவனது நண்பன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விருவரும் 17 வயது சிறுவர்கள் என்பதால் அவர்களது புகைப்படங்களை தர காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.