அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா?
சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனி விருப்பம்.எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி அல்லது வறுவல் செய்து சலித்துவிட்டதா?
அப்படியானால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக, காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலாவை செய்து பாருங்கள்.

தெலங்கானா சமையலின் சிறப்பம்சமே அதன் தைரியமான மசாலா சுவையும், நாக்கைத் தூண்டும் காரமும் தான். அதே தனித்துவத்தை இந்த சிக்கன் மசாலாவும் கொண்டுள்ளது. அரைத்து சேர்க்கப்படும் சிறப்பு மசாலா கலவையால் இந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரிக்கிறது.
ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும் அளவுக்கு இதன் ருசி அசத்தலாக இருக்கும். இந்த தெலங்கானா சிக்கன் மசாலா சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி, நான், புரோட்டா என எந்த உணவுடனும் பக்காவாக பொருந்தும்.
இந்த காரசாரமான தெலங்கானா ஸ்பெஷல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 2 தே.கரண்டி
வெங்காயம் – ¼ கிலோ (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 2 இன்ச் துண்டு ( நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள் (நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ½ தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – ½ தே.கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க

அரைக்க தேவையானவை
வர மிளகாய் – 7
மல்லி விதை – 2 தே.கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
மிளகு – 1 தே.கரண்டி
கசகசா – 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி, வர மிளகாய், மல்லி விதை, சீரகம் மற்றும் மிளகை சேர்த்து நன்றாக வறுக்கவும். மல்லியின் நறுமணம் வரத் தொடங்கியதும் கசகசாவைச் சேர்த்து மேலும் 2–3 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

ஆறிய மசாலாவை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டையும் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இஞ்சி-பூண்டின் பச்சை வாசனை நீங்கியதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அதன் பிறகு சுத்தம் செய்த சிக்கன், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கிளறி, சிக்கனை 4 நிமிடங்கள் வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கிளறிவிடவும்.
இறுதியாக எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அருமையான தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |