பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா?
பொதுவாகவே உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என போராடுபவர்களுக்கு பன்னீர் ஒரு சிறந்த தெரிவு. பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது.
பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கின்றது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்புக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.

பன்னீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
அதுமட்டுமன்றி பன்னீரில் அதிகளவில் ஜிங்க் காணப்படுகின்றது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

பன்னீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, மேலும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கின்றது.
மேலும் பன்னீரில் உள்ள லினோலிக் அமிலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் சரும ஆரோக்கியத்திதை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீரை கொண்டு அருமையான சுவையில், பன்னீர் கருமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
வெள்ளைப் பூண்டு – 6பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை

முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளை லேசாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து, பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் வதக்கிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் வெள்ளைப் பூண்டு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதே மிக்ஸி ஜாரில் தக்காளியையும் சேர்த்து தனியாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகத்தைத் தாளிக்கவும். அதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு ஒரு மேசைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். அதன்பின் அரைத்து வைத்த வெங்காய மசாலாவைச் சேர்த்து கலந்து, கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். குருமா நன்றாகக் கொதித்ததும், வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைச் சேர்த்து மசாலா முழுவதும் பன்னீரில் படும் வகையில் நன்றாக கிளறிவிட்டு 5 நிமிமங்கள் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், பன்னீர் குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |