புதினா சட்னியில் இந்த ஒரு பொருளை சேத்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் சட்னி வகைகளில் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவையே பெரும்பாலானோரால் விரும்பப்படுகின்றது.
அந்தவகையில், வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் புதினா சட்னியை இன்னும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்ததாக மாற்றுவதற்கு அதில் நெல்லிக்காய் சேர்க்கலாம்.
புதினா சட்னியை நெல்லிக்காய் சேர்த்து வித்தியாசமான முறையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், அசத்தல் சுவையுடன் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 2
பெரிய நெல்லிக்காய் - 2 (நறுக்கியது)
புளி - சிறிய துண்டு
புதினா - 1 கைப்பிடி
துருவிய தேங்காய் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அத்துடன் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில், நன்றாக வதக்க்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய நெல்லிக்காயையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் புளி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, அதில் வதக்கிய வெங்காயம், தக்காளியையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |