கொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்
கொழும்பில் உள்ள முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றின் அதிகாரி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாகக், தமிழ் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கொழும்பில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனத்தில் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது பிரத்தியோகச் செயலாளராகக் கடமையாற்றும் தமிழ் பெண்ணை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண் கடந்த 10.02.2021 அன்று பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, தன் கீழ் பணியாற்றும் தமிழ் பெண்களை தகாத உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், முரண்டுபிடித்தால் “உன்னை புலி என்று கூறி பொலிசில் பிடித்துக்கொடுப்பேன்” என்று அந்த அதிகாரி மிரட்டியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால், 2020ம் ஆண்டு செப்டெம்பரில் குளிர் பானத்தில் எதனையோ கலந்து கொடுத்து, மயக்க நிலையை ஏற்படுத்தி தகாத உறவுக்கு முயற்சி செய்தபோது, அப்பெண் கூச்சலிட்டு ஊழியர்களை அழைத்து அந்த அதிகாரியிடமிருந்து தப்பித்துள்ளார்.
தற்போது, நீதிவேண்டி Bambalapitiya போலீசிலும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women and Child Bureau of Sri Lanka) புகார் அளித்துள்ளார். ஆனால், இன்றுவரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக விசாரணைகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர் தமிழ் பெண் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வழமைபோலவே இழுத்தடிப்புக்கள் நடக்கின்றதா?என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அதேப்போல், குற்றம் சுமத்தப்பட்ட உயரதிகாரியின் கருத்துக்களைக் கேட்பதற்காக அவரைத் தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றபோதும் எமது அழைப்புக்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. எமது நிருபரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களுக்கும் அவர் பதில் வழங்கவில்லை.
இது இவ்வாறு இருக்க, இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய மற்றொரு தமிழ் பெண்ணுக்கும் நடந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்பில் பணியாற்றுகின்ற தமிழ் பெண்கள் பலவிதமான துன்புறுத்தலுக்கு இலக்காகி வருகின்ற இந்த நேரத்தில், தமக்கு நடைபெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக துணிந்து குரல் எழுப்பியுள்ள இந்த பெண்களை பாராட்டுகின்ற அதேவேளை, பாதிப்புக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அதிகாரங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
