முதல்வராக பதவியேற்றதும் அடுத்த நிமிடமே ஏற்பட்ட மாற்றம்!
10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் அரியணையை அலங்கரிக்கிறார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்தனர்.

இதற்கான தீர்மான கடிதத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர். நேற்று முன்தினம் அந்த கடிதத்துடன் மு.க. ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அந்த கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள புதிய அமைச்சரவை பட்டியல் கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திறந்தவெளி பகுதியில் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இன்று காலை சரியாக 9.03 மணிக்கு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து கவர்னர் விழா மேடைக்கு வந்தார். அதன் பிறகு பதவி ஏற்க வருமாறு மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தனக்குரிய மேடை பகுதிக்கு வந்து பதவி ஏற்க தயாராக நின்றார். கவர்னர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்து அதற்கான வாசகத்தை படித்தார்.
அதன்படி, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று தொடங்கி பிரமாணத்தை மு.க.ஸ்டாலின் படித்தார். பிறகு ரகசிய காப்பு உறுதி மொழியையும் படித்து முடித்தார். 9.07 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்று முடித்தார்.
முதல்-அமைச்சராக 2 உறுதிமொழி பிரமாணங்களையும் வாசித்து முடித்த பிறகு அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
பிறகு கவர்னர் பன்வாரிலாலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றி கூறினார். பதிலுக்கு கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திராவிட இனத்தைச் சேர்ந்தவன்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவரின் ட்விட்டர் கணக்கில் தமிழக முதலமைச்சர் என மாற்றப்பட்டது அதோடு திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பது சேர்க்கப்பட்டது.
இந்த செயல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவை தோற்றுவித்த அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றபோது தன்னுடைய முதல் உரையில் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறி தான் தொடங்கினார்.

அண்ணாவின் அந்த உரை தற்போது வரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அதே வழியில் அண்ணாவைப் பின்பற்றி ஸ்டாலினும் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி அடிக்கடி எதிர் கருதத்துகளை வெளிப்படுத்தினார் . இந்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
முதல்வாராக பொறுப்பேற்கும் எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவரது தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என நம்புகிறேன்'' என்று மு.க.அழகிரி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி விழாவில் பங்கேற்றுள்ளார். மு.க.அழகிரி விரைவில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்கள் கூறுவார் என்று கூறப்படுகிறது.