சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல்
பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ‘தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார்’ என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்
பொலிவூட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால், முதலில் தொலைக்காட்சிகளில் நடித்துவந்த இவர், இந்தி ரீமேக்கான ‘ Pavitra Rishta’ என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு பொலிவூட் திரையுலகுக்குள் நுழைந்த சுஷாந்த் சிங், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகரானார்.
குறிப்பாக மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது.
தற்கொலை
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மனநல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
வழக்கில் திருப்பம்
சுஷாந்த் மறைந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கின்ற நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சுஷாந்த் சிங்கின் உடலை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்ற மருத்துவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அளித்திருக்கும் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் ரூப்குமார் அளித்த பேட்டியில், அன்று கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தன. அதில் ஒன்று விஐபியின் உடல்.
அதனை உடற்கூராய்வு செய்கையில் அது விஐபியின் உடல் என எங்களுக்கு தெரியவந்தது. அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன.
குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன.
இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரியை உடனடியாக அழைத்து இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.
அதற்கு அவர் முடிந்தவரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
விதிகளின்படி உடற்கூராய்வை முறையாக வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.