காய்ச்சல், சளி பிரச்சினை அடித்துவிரட்டும் சுக்குமல்லி காபி! தயார் செய்வது எப்படி?
காலங்காலமாக நம் முன்னோர்கள் பருவ காலத்துக்கேற்ப உணவு முறையை மாற்றி கொண்டதில் சுக்கு மல்லி காபிக்கு தனி இடம் உண்டு.
சுக்கு எப்போதுமே மருத்துவத்தில் சிறந்த இடத்தை கொண்டிருக்கிறது. அதனால் தான் சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று சொல்வார்கள்.
காய்ச்சல், கரகரப்பு, சளி பிரச்சனைகள் என வழக்கமாக மழையோடு வரக்கூடிய நோய்களை தடுப்பதில் சுக்கு மல்லி காபி பெரிதும் உதவும்.
சுக்கு மல்லி காபி பொடி வெளியில் கிடைக்கும் என்றாலும் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் வீட்டில் தயாரிக்கலாம்.
கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். எப்படி தயாரிப்பது, என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுக்குமல்லி காபி செய்முறை
ஒரு கப் மல்லி(தனியா) விதைக்கு, ஒரு பெரிய துண்டு சுக்கை எடுத்து இரண்டையும் தனித்தனியாகப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் சுக்குத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் என்ற அளவில் சேர்த்துக் கலந்து மூன்றையும் இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இதில் சிறிதளவு பால் சேர்த்து, பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தால் சுக்கு மல்லி காபி ரெடி.
சுக்கு மல்லி பொடி தயாரிக்கும் மற்றொரு முறை
தேவையான பொருள்கள்
சுக்கு - கால் கப் அளவு
மிளகு - சுக்கு அளவில் பாதி அளவு
கொத்துமல்லி விதைகள் - அரை கப்
ஏலக்காய் - 15
செய்முறை
சுக்கை சுத்தம் செய்து உரலில் இட்டு நசுக்கி வைக்கவும். கொத்துமல்லி விதைகளை சுத்தம் செய்து வைக்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும். ஈரம் படாமல் பார்த்துகொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து அதில் பொடியை சேகரித்து வைக்கவும்.
இந்த பொடி ஆறுமாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.