திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்!... பரிதவித்து நின்ற பயணர்கள்
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர். முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், நேற்றிரவு 10.30 மணியளவில் திடீரென முடங்கியது. அதைத்தொடர்ந்து முக்கிய சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவையும் செயல்படவில்லை.
இதனால் சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் இந்த செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.
உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப், திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாற முடியாமல் பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டபின், சுமார் 45 நிமிடங்கள் கழித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட வாட்ஸ்அப் நிறுவனம், அமைதியுடன், பொறுமையுடன் காத்திருந்த பயனாளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளது.
Thanks for your patience, that was a long 45 minutes but we are back! #WhatsAppDown
— WhatsApp (@WhatsApp) March 19, 2021