பேஸ்புக் பக்கத்தில் சிவப்பு ஆமையை பகிர்ந்த மாணவர்.. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள்!
கேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து, அந்த மாணவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சந்தீப் தாஸ், அந்த ஆமையை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அதற்கான காரணமும் தற்போது வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைப் வாழ்விடமாக கொண்ட சிவப்புக் காது ஆமைகளின் அறிவியல் பெயர் Trachemys Scripta Elegans. இவை செல்ல பிராணியாக வளர்க்கப்படும் இந்த ஆமைகள் அழகிய வண்ணமும், சிறிய தோற்றமும் உடையது. ஆனால், இந்த ஆமைகளின் வளர்ச்சி இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்காது.
இந்த சிவப்புக் காது ஆமைகள் நம் நாடு ஆமைகளின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த ஆமைகள், அளவில் சிறியதாக இருந்தாலும், வேகமாக வளரும் தன்மையுடையதாகவும், முரட்டுத்தனமானவையும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இதன் இனப்பெருக்க வளர்ச்சியும் அதிகம் இருக்குமாம்.
இதன் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த ஆமைகளின் வாழ்விடம், இனப்பெருக்க சூழ்நிலை மற்றும் உணவு ஆகியவற்றை இந்த ஆமைகள் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளிலும் கொண்டு வரத் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் இந்த சிவப்புக் காது ஆமைகளை விரும்பும் செல்லப்பிராணி பிரியர்கள் இதனை வாங்கி சட்டவிரோதமாக வளர்க்கின்றனர்.
அதன் பின்னர் இவற்றை இயற்கை நீர் நிலைகளில் விட்டுச் செல்கின்றனர். இது தான் இங்கு பெரும் ஆபத்தாக விளங்குவதாக சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் வண்டலூர் பூங்காவில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் போது கைப்பற்றப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட சிவப்பு காது ஆமைகள் வளர்க்கப்படுகின்றன.