தீ விபத்தில் சிக்கிய மாணவி... 10 ஆண்டுகளுக்கு பின்பு நடிகர் கார்த்திக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவி, நடிகர் கார்த்தியைச் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில் தீ விபத்தில் ஒன்றில் சிக்கிய அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் தான் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதையறிந்த நடிகர் சூர்யா, தீக்காயங்களிலிருந்து ஓரளவு மீண்ட பின்பு, அகரம் அறக்கட்டளை மூலம் சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார். தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றுகிறார்.
அந்த மருத்துவமனையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி பங்கேற்றுள்ளார். அவரைப் பார்த்ததும் ஓடிச் சென்று கார்த்தியை வரவேற்ற அந்த பெண், தான் அகரம் மூலம் படித்து இந்த நிலையில் இருப்பதைக் கூறியுள்ளார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து, இந்த நிலைக்கு உயர்ந்த அந்த பெண்ணை நெகிழ்ந்து போய் கார்த்தி பாராட்டியுள்ளார்.