ஆர்யனுக்கு வழக்கிய நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா? இது ஒன்றை மீறினாலும் மீண்டும் ஜெயிலாம்
போதை பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்த ஷாருக்கானின் மகன் ஆர்யனுக்கு பல நிபந்தனைகளை நீதிமன்றம் விடுத்துள்ளது.
ஆர்யனின் ஜாமீன் மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஷாருக்கான் தரப்பு, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இரு நாட்களாக நடைபெற்ற நிலையில், வழக்கில் ஆர்யன் கான் தரப்பில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
ஜாமீன் மனு வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீனுக்காக தலா ரூ.1 லட்சம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு ஜாமீன் நிபந்தனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது. விசாரணைக்கு அழைக்கும்போது போதைப்போருள் தடுப்பு அலுவலகத்துக்கு வர வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போதைப்போருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையைத் தொடங்கியவுடன் அதை தாமதப்படுத்தக் கூடாது. வழக்கைப் பற்றி சமூகஊடகங்களில் எதிலும் பதிவிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் உடனே ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஒன்று மீறப்பட்டாலும் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உடனே விண்ணப்பிக்க போதைப்பொருள தடுப்பு பிரிவுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.