இலங்கையில் அமைந்திருக்கும், முற்பிறவி வினையை தீர்க்கும் முன்னேஸ்வரம் திருக்கோவில் - அதிசயிக்க வைக்கும் வரலாறு!
இலங்கையில் உள்ள பழைமையான கோவிலில் இந்த முன்னேசுவரம் கோவில் சிவனால் காலத்தால் மிகவும் முற்பட்ட கோவிலாகும். இக்கோவிலை அழகேசுவரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இலங்கைத் தீவின் பிரபலமான ஐந்து ஈஸ்வரம் திருக்கோயில்களுள் முன்னேஸ்வரமும் ஒன்று. இத் திருக்கோவிலும், வரலாற்றுக்கு முந்திய கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இராமாயண காலத்தில் உருவானதாகவும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.
இராமாயண காலத்தில், ஸ்ரீ இராம பிரான் இலங்கைத் தீவு வந்து இராவணனை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டு, தனது மனைவி சீதா பிராட்டியை மீட்டுக்கொண்டதும், அந்த வெற்றிக்காக நன்றி தெரிவிக்க சிவபெருமானை இத்திருத்தலத்தில் வழிபட்டார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
மேலும், முன்னேஸ்வரம் திருக்கோவில், இலங்கைத்தீவின் மேற்குக் கரையோரத்தில், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டைய சில கல்வெட்டுகளின்படி, சோழ மன்னன் குளக்கோட்டன், கோட்டை சிங்கள மன்னர்களான ஆறாவது பராக்கிரமபாகு, ஒன்பதாம் பராக்கிரமபாகு ஆகியோர் இத்திருக்கொயிளைச் சிறப்பித்துக் கட்டித் திருப்பணிகள் செய்ததாகவும், இக்கோயிலின் தாபரிப்புக்காக ஏராளமான வயல் நிலங்களை எழுதிவைத்ததாகவும் தெரியவருகிறது.
இந்த முன்னேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் நாம் பிரதான திருக்கோயிலான ஈஸ்வரன் கோயிலுடன் சேர்த்து, அதனைச் சுற்றி மேலும் பல சிறிய கோயில்களைக் காணக்கூடியதாக உள்ளது.
பிரதான திருக்கோயிலில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமான் என்னும் திருப்பெயருடன் சிவபெருமான் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்த லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார்.
இதனைத்தொடர்ந்து, வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே தனிச் சிறப்பும், அருட்பெருக்கும் நிறைந்து விளங்கிய இத் திருக்கோயில் ஏனைய ஈழத்துத் திருக் கோயில்களைப்போலவே இலங்கைத் தீவைக் கைப்பற்றிய அன்னியரான போர்த்துக்கேயரால் 1517 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
ஆனாலும், இத்திருக்கோவிலின் பக்தர்களின் முயற்சியால், தெய்வ விக்கிரகங்கள் அன்னியரின் கைகளில் அகப்படாமல் பாதுகாக்கப்பட்டன. தற்போது, முன்னேஸ்வரம் திருக்கோவில் இலங்கையின் பிரதான சிவன் திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
மேலும், புத்தளம் மாவட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும், தமிழ் இந்து மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருவதனால், இத் திருக்கோவில் தற்போது அனைத்து சமய மக்களும் சாதி, மத, இன பேதமின்றி இறைவனை வழிபடும் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.
அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவதுடன், இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றார்கள்.
நவராத்திரி, சிவராத்திரி ஆகிய இரு பண்டிகைகளும் இத் திருக்கோவிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் ஆவணி – புரட்டாசி மாதங்களில், தொடர்ந்து 28 நாட்கள் இத்திருக்கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவிலை சுற்றியுள்ள மருதங்குளம், உடப்பு முதலிய பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கிராமமாக இத் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.