ராஜஸ்தானை புரட்டி போட்ட ஹைதராபாத் அணி! தோல்விக்கு இதுதான் காரணமா?
ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, கார்த்திக் தியாகி ஆகியோருக்குப் பதில் எவின் லீவிஸ், கிறிஸ் மாரிஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்குப் பதில் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்குப் பதில் அபிஷேக் சர்மா, ப்ரியம் கர்க், சித்தார்த் கௌல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்களை எடுத்திருந்தது.
ஆட்டத்தில், கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணிக்கு சேசிங் ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை.
சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கிழித்து தொங்கவிட்டார். இறுதியாக ஆட்டம் முடிய 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.
இதன் மூலம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது ஹைதராபாத் அணி. ஆனால் நேற்றைய வெற்றிதான் இந்த அணிக்கு 2வது வெற்றி.