நீண்ட நேரம் லேப்டாப்பில் அமர்ந்திருப்பவரா நீங்கள்? மருத்துவர்களின் எச்சரிக்கை இதோ
லேப்டாப் அல்லது கம்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கார்ப்பல் டியூனல் சின்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) எனப்படும் நரம்பு சுருக்க நோய்களால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கார்ப்பல் டியூனல் சின்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) என்பது கைகளில் ஏற்படும் ஒருவித நரம்பு சுருக்கம் ஆகும். கை நரம்புகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தால் கார்ப்பல் டியூனல் சின்ட்ரோம் உருவாகிறது. இந்த நோய் ஏற்பட்டவருக்கு உணர்வின்மை, பலவீனம் மற்றும் கையில் கூச்ச உணர்வு இருக்கும்.
கார்ப்பல் டியூனல் என்பது மணிக்கட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும், இதன் வழியாக செல்லும் நரம்பு சுண்டு விரலைத் தவிர மற்ற அனைத்து விரல்களையும் கட்டுப்படுத்தும். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு உலகளவில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அதிகரித்துள்ளதால், பெரும்பாலானோர் கம்பியூட்டர், லேப்டாப் முன்பு அமர்ந்து 7 முதல் 9 மணிநேரம் பணிபுரிகின்றனர்.
அப்போது, தவறான முறையில் அமர்வது எலும்பு மற்றும் தசை பிடிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. மேலும், முதுகு வலி, கண் பிரச்சனைகளும் அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், கர்ப்பப் பை மற்றும் கார்ப்பல் டியூனல் சின்ட்ரோமால் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர். லேப்டாப் மற்றும் கம்பயூட்டர் முன்பு நீண்ட நேரம் தவறான முறையில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் நோய்களுள், இந்த நோய்களும் இணைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுபவர்கள், இன்டர்நெட்டில் மூழ்கி இருத்தல், தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் இந்தநோய் பாதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கார்ப்பல் டியூனல் நோய் பாதிப்பை தொடக்க நிலையில் கவனிக்க தவறிவிட்டால், பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். கார்ப்பல் டியூனல் நோய்க்கான அறிகுறிகளை தேசிய மகளிர் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மணிக்கட்டு மற்றும் விரல்களுக்கு இடையே கைகள் புடைக்கும் அல்லது உறுத்திக்கொண்டு இருக்கும் அல்லது நரம்புகள் அசையும்.
விரல்கள் மற்றும் கை மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். கட்டைவிரல் மற்றும் விரல்களில் எரியும், உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது வலி ஏற்படும். சுண்டுவிரலில் வலி இருக்காது.
திடீரென கைகளில் கூச்ச உணர்வு ஏற்படும், விரல்கள் வீங்கும். விரல்களில் ஷாக் அடித்ததுபோன்ற உணர்வு, பிடிப்பதில் சிரமம் அல்லது கையை முறுக்குவதில் சிரமம் போன்ற சிக்கல்களை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.