கொழுந்தனுடன் கள்ளக்காதல்! திட்டமிட்டு கொலை செய்த அண்ணி- சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கொழுந்தனை ஒன்றரைக் கோடி ரூபாய் சொத்துக்காக அண்ணியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கன் (38). இவருக்கு பழனியம்மாள் (33) என்ற மனைவி உள்ளார்.
இவர்களக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொஞ்சி அடைக்கன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவன் மாயமானது குறித்து பழனியம்மாள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணையில் அடைக்கனுக்கும் அவரது பெரியப்பா மகன் அண்ணனின் மனைவியான சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, போலீசார் சித்ராவிடம் விசாரணை நடத்தினர். கொஞ்சி அடைக்கனுக்கு ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. கொஞ்சி அடைக்கனின் பெரியப்பா மகன் அண்ணனும், அவரது மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தார்கள். திருமணத்திற்கு முன்பு அடைக்கனும் அவர்களுடன் வசித்து வந்தார்.
அப்போது அண்ணி சித்ராவுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் சித்ராவிற்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் கோபமடைந்த கொஞ்சி அடைக்கன் காஞ்சிபுரத்தில் குடியேறி, பழனியம்மாளை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் வீட்டை விற்பதற்காக, அங்கு தங்கியிருந்த அவரது அண்ணி சித்ராவை காலி செய்யும்படியும் அடைக்கன் கூறியிருக்கிறார். ஆனால் வீட்டை அபகரிக்க நினைத்த சித்ரா காலி செய்ய மறுத்து வந்துள்ளார். சித்ரா அடைக்கனை அவமானப்படுத்தியும் இருக்கிறார்.
நெருக்கடி கொடுத்து வந்த அடைக்கனை சித்ரா கொலை செய்ய திட்டமிட்டார். அதனையடுத்து, ஏழுமலை, ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கனை அண்ணி சித்ரா தொடர்பு கொண்டு வீடு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னர் டார்ஜான் குமார், விவேக் என்ற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்பிரமணியன், சங்கரநாராயணன் ஆகியோரை அனுப்பி காரில் வரவழைத்திருக்கிறார்.
மண்ணிவாக்கம் மேம்பாலத்தின் கீழே காரை கொண்டு சென்று நிறுத்தி, சீட் பெல்ட்டால் கொஞ்சி அடைக்கனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். பின்னர் சடலத்தின் கை, கால்களைக் கட்டி, ஒரு இரும்பு டிரம்மில் அடைத்திருக்கிறார்கள். அதன் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடி இருக்கிறார்கள். பின்னர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்திலுள்ள சுதர்சன் ரெட்டி என்பவரது கிணற்றில் டிரம்மை வீசி விட்டுத் தப்பி இருக்கிறார்.
கொஞ்சி அடைக்கனை கொலை செய்ய கூலிப்படைக்கு சித்ரா 5 லட்சம் ரூபாய் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் மலைப்பட்டு கிராமத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று சடலம் வீசப்பட்ட கிணற்றை அடையாளம் கண்டனர்.
கிணற்றிலிருந்து இரும்பு டிரம் மீட்கப்பட்டது. அதை உடைத்துப் பார்த்தபோது கொஞ்சி அடைக்கனின் எலும்புகள் மட்டும் கிடந்தன.
அவற்றை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சித்ரா, ஏழுமலை, ரஞ்சித், டார்ஜான்குமார், விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.