கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் அரிய வகை புற்றுநோய் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
புகழ்பெற்ற Nature அறிவியல் இதழில் வெளியான இந்த ஆய்வு, நன்னீர் உயிரினங்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் நிகழ்வாக பதிவாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு இந்த ஏரியில், உடலில் கருப்பு நிறக் கட்டிகளுடன் காணப்பட்ட கெளுத்தி மீன்களை ஆய்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்குள், அங்கு வாழும் 25 முதல் 40 சதவீத மீன்களுக்கு மெலனோமா வகை புற்றுநோய்க் கட்டிகள் உருவானது கண்டறியப்பட்டது.
ஆய்வில் வெளியான தகவல்
ஆரம்பத்தில் ரசாயன மாசுபாடு அல்லது வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், மரபணு ஆய்வுகள் வேறு உண்மையை வெளிப்படுத்தின. இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படவில்லை; மாறாக, உயிருடன் இருக்கும் புற்றுநோய் செல்களே ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் “குளோனல் கேன்சர்” வகையைச் சேர்ந்தது என நிரூபிக்கப்பட்டது.

இதுவரை நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில கடல் சிப்பி இனங்களில் மட்டுமே இத்தகைய நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது கெளுத்தி மீன்களில் கண்டறியப்பட்டுள்ள இது, உலகில் அறியப்பட்ட நான்காவது வகையாகப் பதிவாகியுள்ளது.
இந்தப் புற்றுநோய் மீன்களின் வாய் பகுதி, மீசைகள் மற்றும் தோலில் கட்டிகளாக உருவாகிறது. இதனால் அவற்றின் உணவு தேடும் திறன் பாதிக்கப்பட்டாலும், ஏரியில் போதுமான உணவு கிடைப்பதால் அவை தொடர்ந்து உயிர்வாழ முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களுக்கு ஆபத்ததா?
தற்போது இந்த நோயின் தாக்கம் மெம்ஃப்ரேமாகோக் ஏரியைத் தாண்டி நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றது.மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் தூண்டில்கள் அல்லது படகுகள் மூலமாக இந்த செல்கள் மற்ற ஏரிகளுக்கும் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பரவலைக் கண்காணிக்க Fishbrain என்ற செயலி மூலம் ஆய்வாளர்கள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
இது முற்றிலும் மீன்களுக்கு இடையே மட்டுமே நிகழும் ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினத் தடை (Species Barrier) மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, இந்த மீன்களைப் பிடிப்பதாலோ அல்லது சமைத்து உண்பதாலோ மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவாது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |