Stomach Ulcer: வயிற்று புண்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம்
வயிற்று புண்கள் என்பது இரப்பை அல்லது சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் உள்ள உள் சவ்வில் ஏற்படும் புண்களாகும். மருத்துவ ரீதியாக இதனை Peptic Ulcer என்று அழைக்கப்படுகிறது.
முன்பெல்லாம் இந்த வயிற்று புண்கள் என்பது அதிக காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதால் வரக்கூடியது என்று நம்பப்பட்டு இருந்தாலும் தற்போது ஆய்வுகளின் படி Helicobacter pylori (H. pylori) பாக்டீரியா தொற்று மற்றும் வலி நிவாரண மருந்துகளை நாம் நீண்ட காலம் பயன்படுத்துவதனாலும் இவ்வாறு வயிற்று புண்கள் வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் இதனை சரியான நேரத்தில் நாம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை பெறுவது அவசியமாக இருக்கிறது.

வயிற்றுப் புண்களின் அறிகுறிகள்
வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சலுடன் கூடிய வலிதான் வயிற்றுப்புண்கள் இருக்கக்கூடிய முக்கியமான அறிகுறி ஆகும். இந்த வலி உணவு எடுக்கும் முன்பு வயிற்றில் அதிகமாகவும் சிலருக்கு உணவு எடுத்துக் கொண்ட பிறகு குறைய கூடியதாகவும் இருக்கிறது.
வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏப்பம் வருதல், வாந்தி பசியின்மை போன்றவை இதனுடைய அறிகுறிகளாக இருக்கிறது. சிலருக்கு ரத்த வாந்தி கருப்பு நிற மலம் அல்லது திடீரென கடுமையான வயிற்று வலி போன்ற தீவிர அறிகுறிகள் வருவதையும் நாம் பார்க்கலாம். இவ்வாறு வருகின்ற பொழுது நிச்சயமாக உடனடியாக நம் மருத்துவரை சந்திப்பது நன்மையை தரும்.
உணவு பழக்கத்தில் கவனிக்க வேண்டியவை:
வயிற்றுப் புண்கள் இருப்பவர்கள் கட்டாயமாக சரியான நேரத்திற்கு சீரான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். எண்ணெய் காரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுப்பதை நாம் தவிர்த்து விட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும். காபி மற்றும் குளிர்பானங்கள் அளவோடு எடுத்துக் கொள்வதும் நன்மையை கொடுக்கும்.

தவிர்க்க வேண்டியவை:
பொதுவாக வலி நிவாரண மருந்துகளை நாம் எப்பொழுதும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதை போல், புகைபிடித்தல் மற்றும் மதுபான பழக்கத்தை நிறுத்துவதும் அவசியமாகும், எப்பொழுதும் சுத்தமான உணவு மற்றும் தண்ணீர் அருந்துவது முக்கியம்.
மேலும், இந்த வயிற்றுப் புண்களை நாம் எப்பொழுதும் சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை பெற்றால் உடனடியாக நாம் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக ஆரோக்கியமான உணவைஎடுத்துக்கொள்ளும் பொழுது பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது.